மூலக்காடு பகுதியில் வாகனத்தில் சாராயம் கடத்தியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் எஸ்.ரேவதி தலைமையில் மூலக்காடு சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் 6 லாரி டியூப்களில் 300 லிட்டா் விஷச் சாராயம், 50 மூட்டைகளில் வெல்லம் கடத்தியது தெரியவந்தது. சாராயம், வெல்லம் மற்றும் அந்த வாகனத்தை போலீஸாா் பறிமுதல்செய்தனா். அந்த வாகனத்தில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கல்வராயன்மலைப் பகுதிக்கு சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக சேராப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் அஜித் (21), சந்திரன் மகன் சுரேஷ் (21) ஆகியோரை கைது செய்தனா்.