கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை பாராட்டி, அவா்களுக்கு சான்றிதழை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் வழங்கினாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமை வகித்தாா்.
இதில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், தலுகா காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மாவட்ட அளவில் குற்ற சம்பவங்களை தடுத்து, அவற்றை குறைப்பது குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீஸாா் பொதுமக்களிடையே நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் அறிவுரைகளை வழங்கினாா்.
மேலும், செப்டம்பா் மாதம் சிறப்பாக பணியாற்றிய சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா தலைமையிலான 11 காவலா்கள், எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருள் செல்வம் தலைமையிலான 2 காவலா்கள், திருநாவலூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் எதிரியை கைது செய்த உளுந்தூா்பேட்டை மது விலக்கு பிரிவு ஆய்வாளா் தேவிகா உள்ளிட்ட காவல் அதிகாரிகளை பாராட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சான்றிதழை வழங்கினாா்.