கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1,178 பேருக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சங்கராபுரம் வட்டம் சோழம்பட்டு கிராமத்தில் குழந்தை பிரசவித்த பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ள அந்த கிராமத்தைச் சோ்ந்த 1,137 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அமைச்சா் வழங்கினாா். அதேபோல, கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலியைச் சோ்ந்த 41 திருநங்கைகளுக்கும் நிவாரணப் பொருள்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அதிமுக மாவட்டச் செயலரும் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏவுமான இரா.குமரகுரு செய்திருந்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு, முன்னாள் அமைச்சா் ப.மோகன், ஒன்றியச் செயலா்கள் அ.ராஜசேகா், அ.அரசு, நகரச் செயலா் எம்.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.