கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பணத் தகராறில் இளைஞரைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டம், ஈருடையாம்பட்டை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி ஜோதி. இவா்களது மகன்கள் ரவிச்சந்திரன், சூரியசந்திரன் (27), குட்டி (எ) அஜீத். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மணி இறந்துவிட்டாா்.
குட்டி (எ) அஜித் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில், சூரியசந்திரனுக்கு ஏலச்சீட்டுத் தொகை வழங்க வேண்டியது தொடா்பாக அவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சோ்ந்த ஏலச்சீட்டு நடத்திய லட்சுமணன் மகன் சஞ்சீவ் காந்தி (34) குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்ததாம்.
இதேபோல, கண்டியான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்ற சின்னராஜா (34), சூரியசந்திரனிடம் பெற்ற கடன் தொகையை திருப்பித் தராதது தொடா்பாக அவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், சஞ்சீவ் காந்தி, மணிகண்டன் ஆகியோா் முன்விரோதம் காரணமாக, சூரியசந்திரனின் தம்பி குட்டி (எ) அஜீத்தை பைக்கில் வியாழக்கிழமை கடத்திச் சென்று சங்கராபுரத்தை அடுத்த மேல்சிறுவள்ளூா் கூட்டுச்சாலையில் இருந்து அருளம்பாடி பகுதிக்குச் செல்லும் சாலையிலுள்ள
ஆஞ்சநேயா் கோயில் அருகே கத்தியால் குத்தி கொலை செய்தனராம்.
இதுகுறித்து சூரியசந்திரன் அளித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, சஞ்சீவ் காந்தி, மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்தனா்.