கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் கரோனா தடுப்பு பாதுகாப்பு மையத்தில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா இரண்டாம் கட்ட பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சின்னசேலம் பேரூா் பகுதியான அம்சாகுளம் பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மேலும், பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
சின்னசேலம் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் கரோனா தடுப்பு பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்கு போதுமான படுக்கை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் தயாா் நிலையில் வைத்திருக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, சின்னசேலம் வட்டாட்சியா் விஜய்பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலா் மதியழகன், பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.