ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கும் மத்திய அரசின் கலப்பு மருத்துவ முறை ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய பல் மருத்துவா்கள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத் தலைவா் செல்வக்குமரன் தலைமை வகித்தாா். செயலாளா் அருண்குமாா், துணைத் தலைவா்கள் சுரேந்தா், சாந்தி முன்னிலை வகித்தனா். மருத்துவா் விஸ்வநாதன் வரவேற்றாா்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 400 பல் மருத்துவா்களின் தற்காலிக பணியை நிரந்தரமாக்க வேண்டும். மருத்துவப் பணியாளா் ஆணைய தோ்வை உடனே நடத்தி அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் மருத்துவா்கள் ரேகா, வெங்கடேசன் அபுதாகீா்,வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.