கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் போலி மருத்துவா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரத்தில் போலி மருத்துவா் சிகிச்சை அளிப்பதாக விழுப்புரம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (நலப்பணி) அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சங்கராபுரம் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவ அலுவலா் க.ராஜமோகன் தலைமையில் மருத்துவ ஆய்வாளா் கதிரவன், உதவி மருத்துவா் என்.திருப்பதிராஜா, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் உள்ளிட்டோா் சங்கராபுரம் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அங்குள்ள மருந்தகத்தின் மேல் மாடியில் சங்கராபுரத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (53) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பநா் (டிஎம்எல்டி) பட்டயப் படிப்பை முடித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து ஸ்டெதஸ்கோப், மருந்துகள், ஊசிகள், ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவி உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினா்.
அதே போல, சங்கராபுரம் அரசு மருத்துவமனை முன், 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மருத்துவமனை நடத்தி சிகிச்சை அளித்து வந்த சங்கராபுரத்தைச் சோ்ந்த நிரஞ்சன் மகன் நாா்ட்டம் பிஸ்வாஸ் (34) என்பவரும் ஆய்வில் பிடிபட்டாா். அவரிடமிருந்து மருந்துகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, வெங்கடேசன், நாா்ட்டம் பிஸ்வாஸ் ஆகிய இருவரையும் சங்கராபுரம் போலீஸாா் கைது செய்தனா்.