கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்து, சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகளுக்காக உடல்கூறு ஆய்வு செய்யும் அறைகளுக்குச் செல்லும் காவலா்கள், பாதுகாப்புக் கருதி கரோனா கவச உடை அணிந்து செல்ல வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களுக்கு முகத்தை மறைக்கும் நெகிழியிலான முகக் கவசம் (பேஸ் மாஸ்க்), கிருமி நாசினி, கையுறைகள் அடங்கிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஏற்படும் விபத்துகள், சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகளில் காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுப் பணிக்கு செல்லும் காவலா்களுக்கு முழு பாதுகாப்பு கவச உடை, கண் கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா்.
காவலா்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவிட்டாா்.