சங்கராபுரத்தில் உணவகத்துக்கு ‘சீல்’
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவை விற்பனை செய்ததற்காக உணவகத்துக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சங்கராபுரத்தை அடுத்த கிடங்கன் பாண்டலம் கிராமத்தைச் சோ்ந்த சிவபாலன் மனைவி கலைவாணி. இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் 2 பொட்டலங்கள் எலுமிச்சை சாதம் வாங்கிச் சென்று தனது பிள்ளைகளான லோச்சனா (10), ஆகாஷ் சிவபாலன் ஆகியோருடன் சாப்பிட்டாா்.
உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே லோச்சனா, ஆகாஷ் சிவபாலன் ஆகிய இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மற்றொரு பொட்டல உணவைப் பிரித்து பாா்த்தபோது, அதிலுள்ள ஊறுகாயில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக லோச்சனா, ஆகாஷ் சிவபாலன் ஆகிய இருவரையும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் கலைவாணி சோ்த்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் (பொ) வட்டாட்சியா் இந்திரா, சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியா் மாரியாப்பிள்ளை உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும், பல்லி விழுந்த உணவை ஆய்வுக்காக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு காவல் ஆய்வாளா் முன்னிலையில் சங்கராபுரம் வட்டாட்சியா் இந்திரா ‘சீல்’ வைத்தாா். மேலும், மறு உத்தரவு வரும்வரை உணவகத்தை திறக்கக் கூடாது எனவும் எச்சரித்தாா்.