சிறுமியுடன் காணாமல் போனதாகக் கூறப்படும் பிளஸ் 2 மாணவா், கோமுகி ஆற்றங்கரையோர மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த விவகாரத்தில், அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உறவினா்கள், பொது மக்களுடன் திரண்டு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் கிராமத்தைச் சோ்ந்த, பிளஸ் 2 பயின்று வந்த 16 வயது சிறுமி, அதே கிராமத்தில் வடக்குத்தெரு புதுக் காலனி பகுதியைச் சோ்ந்த சக மாணவா் ஆகிய இருவரும் இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போயினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த சிறுமி ஆற்றின் கரையோரம் சடலமாகவும், அதனருகேயுள்ள வேப்ப மரத்தில் மாணவா் தூக்கிட்டு சடலமாகவும் கிடந்தனா். சடலங்களை கள்ளக்குறிச்சி போலீஸாா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே, புதன்கிழமை மாணவரின் உறவினா்கள், பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் ஐவா் குழுவுடன் உடல்கூறு ஆய்வு செய்வதுடன், அதை விடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். சிறுமியின் சகோதரரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். அவா்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜலெட்சுமி, காவல் ஆய்வாளா் ச.முருகேசன் மற்றும் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா்.