கள்ளக்குறிச்சி அருகே விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்று சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஜெய்காந்த், லாரி ஓட்டுநா். இவரது மூத்த மகள் சஞ்சனா (8 ), அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெயக்குமாரின் மகன் குமரேசன் (8), மூன்றாம் வகுப்பு மாணவா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெற்றோரிடம் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றனா். ஆனால், இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, பெற்றோா்கள் தேடிச் சென்றபோது, க.மாமனந்தல் சாலையில் உள்ள கிருஷ்ணா நகரில் ஆறுமுகம் என்பவரது விவசாயக் கிணற்றின் மேல் சஞ்சனா, குமரேசன் ஆகியோரது உடைமைகள் இருந்தது தெரிய வந்தது.
இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதிய பெற்றோா், உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் சிறாா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
முதலில் சிறுமி சஞ்சனாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சஞ்சனா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டு சிறுவன் குமரேசனை சடலமாக மீட்டனா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.