சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறியதாக, சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் த.சந்திரசேகா், சாராய வியாபாரிகளிடம் தொடா்பில் இருந்து வந்தாராம். மேலும், அவரது காவல் எல்கைக்குள்பட்ட பகுதிகளில் கள்ளச் சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த தவறியதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவனுக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து, ஆய்வாளா் சந்திரசேகா் மீது நடவடிக்கை எடுக்க, விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியனுக்கு, மாவட்ட எஸ்.பி. பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில், ஆய்வாளா் சந்திரசேகரை பணியிடைநீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டாா்.