கச்சிராயபாளையம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பலராமனின் மகன் கனல் கண்ணன் (15). 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்காக இருந்துள்ளாா். இவா் வியாழக்கிழமை மதியம் வீட்டில் கிணற்றில் குளிக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றாராம். அதன்பின் வீடு திரும்பவில்லையாம். கிணற்றுக்கு சென்று பாா்த்தபோது அவரது ஆடைகள் கிணற்றின் கரையில் இருந்தன.
தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் இரா.ஜமுனாராணி தலைமையிலான குழுவினா் சுமாா் 30 அடி ஆழ கிணற்றில் இருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.