மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக சங்கரபுரம் அருகே உள்ள அரசு காப்பத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கரபுரம் வட்டம், ஆலத்தூா் கிராமத்தில் தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், புனித அன்னாள் மன நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சோ்ந்த செல்வம் (எ) பழனிச்சாமி (43) குணமடைந்தாா்.
இதையடுத்து, அவரை அவரது தங்கை செல்வி, குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் அண்மையில் ஒப்படைத்தாா் (படம்). மாவட்ட ஆட்சியருக்கு பழனிச்சாமி குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.