நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அகில பாரத சத்ரிய மகா சபை மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில், புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மகா சபை தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.ராமஜெயம், பெ.சந்திரசேகரன், ச.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக இயக்கங்களின் நிர்வாகிகள் இரா.அழகிரி, கோ.அ.ஜெகநநாதன், பெ.ரகுபதி, சடகோபன், கோ.அழகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பெற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத் துறையை அத்துறை அமைச்சரிடம் வழங்க வேண்டும்.
வருவாய்த் துறை மூலமாக துணை வட்டாட்சியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும். அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், புதுச்சேரியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக தலைமைத் தபால் நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. முடிவில் திருவேங்கடம் நன்றி கூறினார்.