சென்டாக் சார்பில், மருத்துவப் பாடப் பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எம்.பி.பி.எஸ். பாடப் பிரிவுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், 258 இடங்கள் நிரப்பின. மேலும், நீதிமன்ற உத்தரவுபடி 8 இடங்கள் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என்று சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி காலை 9 மணிக்கு எஸ்சி பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து, காலை 10 மணிக்கு நீட் தேர்வில் 567 முதல் 213 வரையும், 11 மணிக்கு 212 முதல் 160 வரையும், முற்பகல் 12 மணிக்கு 159 முதல் 131 வரையும், பிற்பகல் 2 மணிக்கு 130 முதல் 107 வரையும் கட்ஆஃப் மதிப்பெண்கள் எடுத்து புதுச்சேரி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இதில் பங்கேற்க 1,375 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.பி.பி.எஸ். பாடப் பிரிவில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் சென்டாக் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.