விற்பனைப் பிரதிநிதிகள் நல வாரியத்தை அமைக்க வேண்டும் என, புதுச்சேரி விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அதன் தலைவர் டி.செல்வராசு வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தில் 2.5 லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.
மீதமுள்ள இளைஞர்கள் படித்த படிப்புக்கான வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
மேலும் பலர் பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., பி.காம்., படிப்புகளை முடித்துவிட்டு, பொருள்களை விற்பனை செய்யும் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். தினமும் இலக்கு என்ற அடிப்படையில் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.
இதனால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. அவர்களைப் பாதுகாக்க புதுவை அரசு விற்பனைப் பிரதிநிதிகள் நல வாரியத்தை அமைத்து, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.