புதுவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என, அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே, அந்தச் சட்டத்தை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சென்டாக்கில் தொழில் படிப்புகளில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 11 பேரும், இந்த ஆண்டு 9 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதி உள்ளவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர். எனவே, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முழுக் கட்டணத் தொகையையும் அரசு வழங்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை காக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தரப்படவில்லை. இதனால், சாலை வசதியைக்கூட தொகுதி மக்களுக்கு செய்து தர முடியவில்லை. புதுச்சேரியின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அன்பழகன்.