புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் அதிரடி உத்தரவையடுத்து, நகர்ப் பகுதிகளில் வைக்கப்பட்ட பதாகைகளை பொதுப் பணித் துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காகவும், நகரின் அழகை பேணவும் பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற 30-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, நகர்ப் பகுதிகள் முழுவதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி, தனக்கு வைக்கப்பட்ட பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், புதுச்சேரி நகர்ப் பகுதிகளில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நகராட்சி ஆணையர் கணேசன் தலைமையில் நகராட்சி, பொதுப் பணித் துறை ஊழியர்கள் நகர்ப் பகுதிகளில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றினர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கணேசன் கூறியதாவது: புதுச்சேரி நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் பதாகைகள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.