புதுச்சேரியில் பெண்களை கேலி செய்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஹரியாணாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஸ்மைலி. புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர், கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டு செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரைச் சுற்றி சில இளைஞர்கள் நின்று கொண்டு தங்களையும் சேர்த்து புகைப்படம் எடுக்குமாறு வற்புறுத்தினராம்.
இதைக் கண்ட சிலர் சுற்றுலா வந்த பெண்களை கேலி செய்வதாக பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சுல்லங்குடியை சேர்ந்த ராஜேஷ் (19), மீனாட்சி சுந்தரம் (19), விக்னேஷ்குமார் (19), பாலமுருகன் (28), மற்றொரு பாலமுருகன் (24), வில்லியனூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ரஷீக் (19) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ராஜேஷ் உள்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் வேலை செய்து வருவதும் தெரிந்தது.