வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் நிலவி வந்த வளி மண்டல சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால்,புதுச்சேரி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடற்கரை சாலை, உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மலை அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கடலூரில்...: இதேபோல, கடலூர் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடலூரில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று வீசியது. அதைத் தொடர்ந்து மழை பெய்தது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் லக்கூரில் அதிகபட்சமாக
74 மி.மீ. மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): வேப்பூர் 51, கீழச்செருவாய் 49, காட்டுமயிலூர் 46, பெலாந்துரை 22, தொழுதூர் 15, விருத்தாசலம் 12, லால்பேட்டை 10, சிதம்பரம் 9, காட்டுமன்னார்கோவில் 8, அண்ணாமலை நகர் 6.80, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குப்பநத்தம் தலா 5, புவனகிரி 2.