புதுச்சேரி தொழிலாளர் துறை சார்பில், தாகூர் அரசுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 520 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பகம் மற்றும் தாகூர் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசுச் செயலர் மிகிர் வரதன், தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன், துணை ஆணையர் முத்துலிங்கம், தாகூர் கலைக் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் 1800 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 37 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. பத்தாம் வகுப்பு பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., எம்பிஏ, பி.காம், பிஎஸ்சி, பி.எட் படித்த சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அவர்களிடம் தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்க்காணல் நடத்தினர். இதில் தகுதியான 520 பேரை தேர்வு செய்தனர். முதல்கட்டமாக 150 பேருக்கு வரும்
21-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி பணி ஆணை வழங்கவுள்ளதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.