புதுச்சேரியில் ஆட்டோவில் வைத்து சுற்றியபடி பெயிண்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(30), பெயிண்டர். மதுப் பழக்கம் உள்ள இவர் வியாழக்கிழமை இரவு அங்குள்ள திரையரங்கம் அருகே சாலையோர
கடையில் சாப்பிட்டார்.
அப்போது அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு நின்றுகொண்டிருந்த ஓட்டுநரை கணேசன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் இதுபற்றி தனது நண்பர்கள் 2 பேரை செல்லிடப்பேசி மூலம் வரவழைத்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கணேசனை ஆட்டோவில் தூக்கிச் சென்றனர். முத்தியால்பேட்டை, மடுவுபேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர்கள் ஆங்காங்கே ஆட்டோவை நிறுத்தி கணேசனை சரமாரியாக தாக்கினராம்.
பின்னர் ராஜா திரையரங்கம் அருகே தூக்கி வீசிவிட்டு சென்று விட்டனராம். தாக்குதலில் கணேசன் பலத்த காயமடைந்தார். கணேசனை மீட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கணேசனை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.