கொலை வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பிரபல ரெளடி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் மடுவுப்பேட்டை முரளி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தட்டாஞ்சாவடி செந்தில் .
இவர் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், மதுரையில் பதுங்கியிருந்த அவரை காவலர்கள் கடந்த நவ.4-ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி தனபால், தட்டாஞ்சாவடி செந்திலுக்கு ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மேலும், செந்தில் ஏனாமில் தங்கியிருந்து தினமும் காலை, மாலையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து செவ்வாய் அல்லது புதன்கிழமை காலையில் அவர் விடுவிக்கப்படலாம் என்று எதிரபார்க்கப்பட்டது. செந்திலை ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்திட உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படாமல் இருந்தார்.
இந்த நிலையில், செந்திலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் அவரை குண்டர்
தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய கோரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் கலையரன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி செந்தில் குண்டர் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனால், ஜாமீன் கிடைத்த பிறகும் செந்தில் வெளிவர முடியாத நிலை உருவாகியுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதானால் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்.
அதன் பிறகே ஜாமீன் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.