முன்னாள் பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ.குரு மறைவையொட்டி, புதுச்சேரியில் 2 பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
காடுவெட்டி குரு உடல் நலக் குறைவு காரணமாக இறந்ததையொட்டி, தமிழகத்தில் அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பேருந்துகள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டன.
அதே போல, புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தமிழக அரசுப் பேருந்து ஒன்று கல்வீசித் தாக்கப்பட்டது. மேலும், சனிக்கிழமை காலை புதுச்சேரியில் இருந்து நாகைக்குச் சென்ற புதுச்சேரி அரசுப் பேருந்து மீது முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் கல்வீசித் தாக்கினார்.
இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில் அந்தப் பேருந்து ஓட்டுநர் மோகன்ராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியில் சனிக்கிழமை மதியம் வரை தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மேலும், புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.