கஜா புயல் காரணமாக காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகள் அவசரமாக கரை திரும்பின.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஞாயிற்றுக்கிழமை புயலாக மாறியது. இதற்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்துக்கு 840 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இப்புயல் நவ.15-ஆம் தேதி முற்பகல் சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாள்தோறும் சுமார் 250 விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். வானிலை ஆய்வு மையம், மீன்வளத் துறையின் அறிவுறுத்தலை ஏற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை கடலுக்கு செல்லக் கூடியவர்கள், மீன்பிடிப்பை தவிர்த்தனர். இதேபோல், கடலோர கிராமங்களில் இருந்து சுமார் 600 ஃபைபர் மோட்டார் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
துறைமுகத்தில் விசைப் படகுகளையும், தொலைதூரத்துக்குச் செல்லக் கூடிய மோட்டார் ஃபைபர் படகுகளை அரசலாற்றங்கரையிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்தக் கட்டமாக வானிலை ஆய்வு மையம் தரும் தகவலின் அடிப்படையிலேயே கடலுக்கு செல்வது குறித்து முடிவெடுக்கப்படும் என விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.