சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
ஓசூரில் காதல் தம்பதி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகப் பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதி கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆணவக் கொலையைக் கண்டித்து, புதுச்சேரி அஜந்தா சந்திப்பில் சனிக்கிழமை திரண்ட அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் படுகொலை சம்பவத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த திடீர் சாலை மறியலால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் ஹேமச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.