கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை மாநிலம் திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலையை தனியாருக்கு விட எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை மாநிலம் திருபுவனையில் இயங்கி வரும் ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நூற்பாலையை
தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு நிகழாண்டுக்கான போனஸ் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், நூற்பாலை நலிவடைய காரணமான நிர்வாக இயக்குநரை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூறடிச் சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு ஆலைத் தொழிலாளர் சங்கத் தலைவர் நரசிங்கம் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஸ்பின்கோவின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சச்சிதானந்தம், போக்குவரத்து துணை ஆணையராகவும் பொறுப்பு வகிப்பதால் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் கூட்டுறவு ஆலை ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.