புதுச்சேரி துறைமுகம் இன்னும் 3 மாதங்களுக்குள் செயல்படத் தொடங்கும் என்று சமூகநலத் துறை மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியின் சரக்கு துறைமுகம், தேங்காய்த் திட்டு துறைமுகம் இடையே உள்ள பொதுவான முகத்துவாரத்தில் அடிக்கடி மண் தூர்ந்து விடுவதால், அதன் வழியாக செல்லும் படகுகள், மீன்பிடிக் கலன்கள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. இதனை அரசு உடனடியாக கருத்தில் கொண்டு மீனவர் நலனை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி துறைமுகம் தூர்ந்தவுடன், ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு வெளிமாநில அல்லது மத்திய அரசின் தூர்வாரும் கப்பல் மூலம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காலதாமதம் ஆகிறது. இந்த நிலையில், புதுச்சேரி துறைமுகத்துக்கு சொந்தமான தூர்வாரும் இயந்திரத்தை கொண்டே தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையேற்று ரூ.1.78 கோடி செலவில் 60 ஆயிரம் கன மீட்டர் மண்ணை அப்புறப்படுத்தும் பணி கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தூர்வாரும் பணியை துறை அமைச்சர் கந்தசாமி, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.அன்பழகன் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: துறைமுகம் தூர்ந்துள்ளதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி துறைமுகத்துக்கு சொந்தமான தூர்வாரும் இயந்திரத்தைக் கொண்டே தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி மூன்று மாத காலத்தில் முடிவடையும். அதைத்தொடர்ந்து ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் தூர்வாரும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். மேலும் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணியும் மேற்கொள்ளப்படும். 3 மாதத்துக்குள் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
இந்த ஆய்வின்போது துறைமுக நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் உடனிருந்தார்.