புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து சொகுசு விடுதியில் தங்கியிருந்த வட மாநில பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வட மாநில பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன் சனிக்கிழமை புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.
புதுச்சேரி பிரதான சாலையில் மது விடுதியுடன் கூடிய ஒரு உணவகத்தில் 3 பேரும் மது அருந்திவிட்டு அங்கு நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அவர்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் நடனமாடியுள்ளனர்.
அப்போது, அவர்கள் அந்தப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை அவருடன் வந்த ஆண் நண்பர்கள் தட்டிக் கேட்ட போது, புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் அவர்களைத் தாக்கிவிட்டு, மீண்டும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால், அவர் உணவகத்தைவிட்டு வெளியேறி வந்து, ஒதியஞ்சாலை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.