பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரு சக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்து நூதனப் போராட்டத்தில் புதுவை பிரதேச மாணவர் கூட்டமைப்பினர் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, புதுவையில் மாணவர் கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் சுவாமிநாதன் தலைமையிலும், பொதுச் செயலாளர் முருகன் முன்னிலையிலும் நிர்வாகிகள் நெல்லித்தோப்பு சந்திப்பில் திங்கள்கிழமை ஒன்று திரண்டனர். அவர்கள் பேரணியாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்தனர்.
பேரணியில், மோட்டார் சைக்கிள்களை கயிறு கட்டி இழுத்து வந்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே மாநில துணைச் செயலாளர் புவியரசன் தலைமையில் நிர்வாகிகள் ஒன்று திரண்டு அஜந்தா சந்திப்பு வரை பேரணியாகச் சென்றனர். அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி 40 பேரை கைது செய்தனர்.
இதேபோல, மண்ணடிப் பேட்டை, காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடத்திய மாணவர் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட மாணவர் கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.