பதவி உயர்வு கோரி மின்துறை ஊழியர்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு நபர் குழு பரிசீலனை அடிப்படையில் 12 ஆண்டுகளாக பெற்று வரும் ஊதியத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உறுதிப்படுத்த வேண்டும். பதவி உயர்வை காலத்தோடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக் குழுவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் தொடக்கமாக புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலகம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், வேல்முருகன், மதிவாணன், உத்திராடம், பரத்குமார், திருமூர்த்தி, பக்தவச்சலம், ராஜாராம், முருகன், இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.