காரைக்காலில் காவல் துறையின் அனுமதியை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தியது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைக்காலில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி நாளிலும், மற்ற நாள்களிலும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின்போது ஒவ்வொரு விநாயகருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். உரிய அனுமதியை காவல் நிலையத்தில் பெற்று, காவல்துறையின் வழிகாட்டுதலின்படி ஊர்வலம் நடத்தவேண்டும் என காவல்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், காரைக்கால் பகுதி திருப்பட்டினம் நெடுந்தெருவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பால விநாயகர் குழு சார்பில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வியாழக்கிழமை இரவு நீர்நிலையில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு காலை 10 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே காவல் துறை அனுமதி வழங்கியது. ஆனால் ஊர்வலம் நெடுந்தெருவில் இருந்து புறப்பட்டு திருப்பட்டினம் பகுதி முழுவதும் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மேல்தான் கொண்டு சென்று திருமலைராஜனாற்றில் கரைக்கப்பட்டுள்ளது. இதனால், போலீசாரின் அனுமதியை மீறி ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், அரசு உத்தரவை மீறியதால் பால விநாயகர் குழுவை சேர்ந்த கபிலன், பாலமுருகன் உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.