கேரள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ. 3.25 லட்சம் நிதியுதவியை புதுவை காவல் துறை இயக்குநர் (டிஜிபி) சுந்தரி நந்தா சனிக்கிழமை வழங்கினார்.
புதுவை மாநிலம், மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்தவர் தேவ் ஆனந்த். தலைமைக் காவலரான இவர், கோரிமேட்டில் உள்ள காவலர் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தார். கேரளத்தில் கடந்த மாதம் மழை வெள்ளம் ஏற்பட்ட நிலையில், தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பார்க்கச் சென்றார். அப்போது பாலக்காட்டில் மழை வெள்ளத்தில் சிக்கி தேவ் ஆனந்த் உயிரிழந்தார்.
இதனிடையே, காவல் கட்டுப்பாட்டு அறையில் அவருடன் பணியாற்றிய அனைத்து காவலர்கள் மற்றும் தேவ் ஆனந்துடன் பணியில் சேர்ந்த அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை அவரது குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்தனர். அதன்படி, அனைவரும் சேர்ந்து அளித்த ரூ. 3.25 லட்சத்தை தேவ் ஆனந்த் குடும்பத்தாரிடம் அளிக்கும் நிகழ்ச்சி கோரிமேடு காவலர் கட்டுப்பாட்டு அறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் டி.ஜி.பி. சுந்தரி நந்தா பங்கேற்று தேவ் ஆனந்த் குடும்பத்தாரிடம் ரூ. 3.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
அப்போது, டி.ஐ.ஜி. சந்திரன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், காவல் கண்காணிப்பாளர்கள் ஜிந்தா கோதண்டராமன், பாஸ்கரன், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.