புதுவை யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுவையில் விரைவில் 590 காவலர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வயது வரம்பு 22 ஆக உள்ளது. இதை 24 -ஆக உயர்த்த பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், வயது வரம்பு தளர்த்துவதற்கான முடிவு அரசால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதற்கு ஆளுநரே முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன் தலைமையில் அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, ஆளுநரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது, இளைஞர்களின் வாழ்வுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத சட்டப் பேரவை உறுப்பினர்கள் சார்ந்த கட்சிகளுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.