புதை சாக்கடை இணைப்புக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வு, சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நிலையில், மக்கள் மீது பல்வேறு வரிகளை சுமத்தியுள்ள காங்கிரஸ்
அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், புதை சாக்கடை திட்ட கழிவுநீர் இணைப்புக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும், இதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமையில் குடிநீர் கோட்ட உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பொதுச் செயலர்கள் நாகராஜன், ரவி அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சோமசுந்தரம், தேசிய பொதுக் குழு உறுப்பினர் இளங்கோவன் , நிர்வாகிகள் ஏம்பலம் செல்வம், துரைகணேசன், கோபி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு விதிமுறைகளின்படியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், பாஜகவினரின் கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் பாஜகவினரிடம் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.