மனஅழுத்தம் குறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் வலியுறுத்தினார்.
புதுவை பல்கலைக்கழகப் பயன்முறை உளவியல் துறை சார்பில், உலக மனநல நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்குத் தலைமை வகித்த பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங் பேசியதாவது: மன அழுத்தம் குறைய இன்றைய இளைஞர்கள் நன்னெறி சார்ந்த புத்தககங்களை வாசிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். புத்தகங்களை வாசிப்பதால் மன அழுத்தம் மட்டுமல்ல; புதிது புதிதான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். மேலும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அப்போதுதான வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐஐடி கான்பூர் மனித வளம் - சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த (ஓய்வு) பேராசிரியர் லீலாவதி கிருஷ்ணன் பேசியதாவது: இந்திய சமூகத்தில் இளைஞர்களிடையே மனநல பிரச்னை அதிகமாக உள்ளது. இதிலிருந்து வெளிவர மன ஆரோக்கியம், சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்றார்.
விழாவில் புல முதன்மையர் கோவிந்தராஜ் உரையாற்றினார். முன்னதாக, பேராசிரியர் ரங்கைய்யா வரவேற்றார். உளவியல் துறைத் தலைவர் சுரேந்திரகுமார் சியா தொடக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் மனநலம் தொடர்பான ஓவியங்கள், நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், திரைப்படங்களும் திரையிடப்பட்டன.