புதுவை பாண்லே நிறுவனத்தில் தற்காலிக ஊழியர்கள் 164 பேருக்கு பணி நிரந்தர ஆணையை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
புதுவை பாண்லே பால் கூட்டுறவு நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்த 164 பேருக்கு, பணி நிரந்தர ஆணை வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு, ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனங்களில் அதிக லாபம் தரும் பாண்லேவில் தற்போது தற்காலிக ஊழியர்கள் 164 பேர் நிரந்தரப் பணியை பெற்றுள்ளனர். இதன் காரணமாக, அவர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு மாதத்துக்கு ரூ.13 லட்சம் கூடுதல் செலவாகும் என்றார் அமைச்சர் கந்தசாமி.