புதுச்சேரியில் மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்கக் கோரி, அரசு ஊழியர் குடும்பத்தினருடன் ஆளுநர் மாளிகை எதிரே திடீர் தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி தேத்தாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித் துறையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
பாலாம்பாளுக்கு அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்கக் கோரி, அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் கேட்டாராம். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாலாம்பாளின் கணவர் தனது இரு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சிலருடன் புதுவை ஆளுநர் மாளிகை எதிரே வெள்ளிக்கிழமை அமர்ந்து திடீர் தர்னாவில் ஈடுபட்டார்.
உடனடியாக பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்குப் பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார். இதையடுத்து, அங்கு வந்த பெரியக்கடை போலீஸார், தர்னாவில் ஈடுபட்ட முருகையினிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.