புதுச்சேரி கடலில் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மேலும், பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து தினமும் வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் புதுச்சேரிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புதுச்சேரி கடலில் கரைக்கப்பட்டன.
பெரியகாலாப்பட்டு செல்லியம்மன் நகரில் நண்பர்கள் ஒருங்கிணைந்து விநாயகர் ஒருங்கிணைப்பு பேரவை ஒன்றை உருவாக்கி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு 4-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கணபதி பூஜையோடு பிரதிஷ்டை செப்.13-ஆம் தேதி செய்யப்பட்டது. தினமும் ஆன்மிக கீர்த்தனை, பாரம்பரிய மிருதங்க வாசிப்பு போட்டி, கோலப்போட்டி நிகழ்ச்சிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக புதுச்சேரி பெரியகாலாப்பட்டு கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பேரவைத் தலைவர் குப்பன், கௌரவத் தலைவர் மணி, செயலாளர் கருணாகரன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கார்த்தி, ஆசைதம்பி, ரமேஷ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதேபோல வீராம்பட்டினம், நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.