அரசியல் கட்சி பிரசாரத்துக்கு வந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட டோக்கனுக்கு மதுபானங்கள் வழங்கியதாக புதுச்சேரி கருவடிக்குப்பம் மதுக் கடைக்கு கலால்துறையினர் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் துறையினர், போலீஸார், துணை ராணுவப் படையுடன் இணைந்து பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதை தடுக்க ரோந்துப் பணியிலும், வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ஒரு மதுக் கடையில், புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தவர்களுக்கு அளிக்கப்படும் டோக்கனுக்கும், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுக்கும் மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதாக கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் குறிப்பிட்ட கடைக்குச் சென்று விசாரித்த போது, உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து கலால்துறையினர், போலீஸாரின் உதவியுடன் அந்தக் கடைக்கு சீல் வைத்தனர்.