மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று முன்னாள் எம்.பி. கண்ணன் அறிவித்துள்ளார்.
புதுவை அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்ந்த கண்ணன், ஏற்கெனவே உள்துறை அமைச்சர், பேரவைத் தலைவர், எம்.பி. உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். தனது பதவிக் காலத்தில் மாநிலம் முழுவதும் ஆதரவாளர்களைக் கொண்டிருந்தார்.
கடைசியாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து பணியாற்றிய இவர், இப்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எனவே, புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இவரது ஆதரவைப் பெற காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸார் முயற்சி செய்தனர்.
இந்த நிலையில், தனது நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
வரும் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் அணிகளாக போட்டியிடுகின்றன. நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும், எந்த அணிக்கும், எந்த வகையிலும் எனது ஆதரவை தெரிவிக்கவில்லை. எனது பெயரை யாரும் இந்தத் தேர்தலில் பயன்படுத்த வேண்டாம்.
வாக்காளர்களும், எனது ஆதரவாளர்களும் அவர்களது மனச்சாட்சிபடி எந்த கட்சி, எந்த அணி, எந்த வேட்பாளர் உங்களது நலவாழ்வுக்கும், சந்ததியினரின் எதிர்காலத்துக்கும், மாநில முன்னேற்றத்துக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் யார் பாடுபடுவார் என நம்புகிறீர்களோ அவருக்கு உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் களத்தில் நான் இல்லை. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் நான் இருப்பேன். உங்களை நான் சந்திப்பேன். இன்னும் அதிகபட்சமாக 2 மாதங்களில் பதிவு பெற்ற அரசியல் கட்சியுடன் உங்கள் மத்தியில் நான் இருப்பேன். இந்தத் தேர்தலில் யாருக்கும் நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. நீங்கள் உங்களது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கண்ணன்.