புதுச்சேரியில் அரவிந்தர் பிறந்த நாள் விழா
ஸ்ரீஅரவிந்தரின் 147-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீஅரவிந்தர் 1872-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பிறந்தார். ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட
ஈடுபாடு காரணமாக, 1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தார். இங்கு ஆன்மிக தேடலில் ஈடுபட்ட அவர், பின்னர் அரவிந்தர் ஆசிரமத்தை உருவாக்கினார்.
ஆண்டுதோறும் அரவிந்தரின் பிறந்த நாள் விழா ஆசிரமத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்ரீஅரவிந்தரின் 147-ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஆசிரமத்தில் உள்ள அரவிந்தரின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அரவிந்தர் ஆசிரமத்தில் காலையில் கூட்டுத் தியானம் நடைபெற்றது. அரவிந்தர் மற்றும் அன்னை வசித்த அறைகள் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்கள் பலர் தரிசித்தனர். இவர்கள் சிறப்பு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.