முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு கைது செய்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு போட்டு, அவரை கைது செய்துள்ளதுடன், அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் மத்திய அரசு உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. மேலும், இதன் மூலம் காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் களங்கம் ஏற்படுத்த முயன்று வருகிறது. அவர்களின் எண்ணம் என்றென்றும் ஈடேறாது. தேச ஒற்றுமைக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும் என்றென்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மனதில் இருந்து எந்த சக்தியாலும் எந்நாளும் நீக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.