நோயாளி பராமரிப்புப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை கவன ஈர்ப்பு தர்னாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர் மு. அன்புசெல்வன், தலைவர் ஜானகி ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மு. கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில், 7 ஆவது ஊதியக்குழு அறிவித்த 8 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், நோயாளி பராமரிப்புப் படி வழங்க வேண்டும், செவிலியர் உதவித்தொகை, பயணப்படி உள்ளிட்ட உயர்த்தப்பட்ட சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.