ஊதியம் குறைக்கப்பட்டதைக் கண்டித்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றும் உதவியாளர், பரிமாறுபவர், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த ஆட்சியில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்ற இவர்களுக்கு ஊதியமும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், பதவி உயர்வில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பதவி உயர்வை ரத்து செய்தது. இதனால் கூடுதலாக வாங்கிய ஊதியமும் குறைக்கப்பட்டது.
பதவி உயர்வு ரத்து மற்றும் ஊதியம் குறைக்கப்பட்டதைக் கண்டித்து ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், லே கபே, சீகல்ஸ், நோனாங்குப்பம் படகு குழாம், ஊசுடு படகு குழாம், காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள சீகல்ஸ் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து, உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.