காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி, திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பெருமாள்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாசி மாதத்தில் நடத்தப்படும் மாசிமகத்தையொட்டி சிவன் மற்றும் வைணவ கோயில்களில் பிரமோத்ஸவம் மாசி மகோத்ஸவம் எனும் பெயரில் விழாவாக நடத்தப்படுகிறது. திவ்யதேசங்களில் ஒன்றான நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது மிகுந்த சிறப்பை பெற்ற விழாவாக நீண்ட ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதையொட்டி ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளும், திருமருகல் ஸ்ரீவரதராஜப் பெருமாளும் தனித்தனி பல்லக்கில் திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணியளவில் வந்து சேர்ந்தன.
இங்கு ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீற்றிருக்கும் வகையில் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கிட்டு பெருமாளை வழிபட்டனர். பிற்பகல் பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு வெள்ளை மண்டபத்திலிருந்து புறப்பாடானது. இவரைத் தொடர்ந்து திருமருகல் ஸ்ரீவரதராஜப் பெருமாள், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீவீழிவரதராஜப் பெருமாள், ஸ்ரீரெகுநாத பெருமாள், நிரவியில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள், கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராம பெருமாள் ஆகிய 7 பெருமாள்களும் பட்டினச்சேரி கிராமம் வழியே கடற்கரைக்கு திரளான பக்தர்கள் சூழ சென்றன.
மீனவ கிராம மக்கள், கிராம எல்லையில் சுவாமிகள் நுழைந்ததும், சம்பிரதாய முறைப்படி சுவாமிகளை வரவேற்றனர். எல்லா பெருமாள்களும் தனித்தனி பல்லக்கில் வீற்றிருந்தவாறு கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி பக்தர்களுக்கு தீர்த்தவாரி செய்தன.
நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், கடலோரத்தில் கட்டுமரத்தை காலாக நட்டு பந்தல் போடப்பட்டிருந்ததில் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் இருந்த சப்பரம் இறக்கிவைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பட்டு வஸ்திரம் சாற்றி, ஏராளமான பழங்களுடன் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து இரவு எல்லா பெருமாள்களும் திருமலைராயன்பட்டினத்தில் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.