பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை வகித்தார். அனைத்துத் துறை மாணவிகளும் பாரம்பரிய உடை அணிந்து, கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, புதுப்பானையில் சர்க்கரை பொங்கலிட்டனர். தொடர்ந்து, ஆடிப் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொருளாதாரவியல் துறை மாணவிகள் உறியடி நிகழ்ச்சி நடத்தினர். இதேபோல, மனையியல் துறையின் கீழ் இயங்கும்
மழலையர் பள்ளி மாணவ, மாணவிகள் பட்டு வேட்டி, பாவாடை சட்டை அணிந்து பாரம்பரிய முறையில் பொங்கலிட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசன், கண்காணிப்பாளர் கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் ஒரே பாரதம், உன்னத பாரம் திட்டத்தின் கீழ், கலாசார பரிவர்த்தனை பயணமாக புதுவை வந்துள்ள டாமன், டையூ யூனியன் பிரதேச மாணவர்களும், ஆசிரியர்களும் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலாசார உடை அணிந்து கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டை உயர்கல்வி துறைக்கான நோடல் அதிகாரி அலமேலு மங்கை செய்திருந்தார். விழாவில் கல்லூரி மூத்தப் பேராசிரியர்கள் சுப்ரமணியன், நடேசன், பிரமோதினி, மனையியல் துறை தலைவர் ராஜி சுகுமார், மழலையர் பள்ளி ஆசிரியர்கள் ஜெரால்டின், கவிதா உள்ளிட்ட அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.