புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் பொதுப் பணித் துறை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடு போனது.
அரியாங்குப்பம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (54). பொதுப் பணித் துறையில் ஊழியராகப் பணிபுரிகிறார். இவரது தம்பி பூபாலன் மகள் திருமணத்துக்காக 10 பவுன் நகையை செல்வராஜிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் செல்வராஜ் குடும்பத்துடன் கடந்த ஜன. 6-ஆம் தேதி திருமண வேலை காரணமாக தஞ்சாவூர் சென்றிருந்தார். மறுநாள் அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.