இலவச மனித வள மேம்பாட்டுப்பயிற்சி முகாம் நடத்த விரும்பும் அரசுப் பள்ளிகள் ஜன.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று இளைஞர் அமைதி மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த மையத்தின் நிறுவனர் எழுத்தாளர்அரிமதி இளம்பரிதி புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
இளைஞர்அமைதி மையத்தின் சார்பில் 1990-ஆம் ஆண்டு முதல் புதுவை மற்றும் தமிழக ப் பகுதிகளில் பல்வேறு இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், இம்மையத்தின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
தனித்திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது, பேச்சாற்றல், முடிவெடுக்கும் திறன், போட்டித் தேர்வுகளை தைரியமாக எழுதும் முறை, சமூக ஊடகங்களை பொறுப்போடு கையாளுதல், சுயகட்டுப்பாடு, மனித உறவுகளின் முக்கியத்துவம், கல்வியின் முக்கியத்துவம், கவனச்சிதறலுக்கான காரணங்கள், நினைவாற்றல் திறன், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான வழிமுறைகள், ஆழ்மனச் சிந்தனைகள், தலைமையாளருக்கான தகுதிகள் மற்றும் படைப்பாற்றல், திறன்வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தலைப்புகளில் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
கிராமப் புறங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த முகாம் அந்தந்த பள்ளிகளிலேயே இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சியை தங்கள் பள்ளிகளில் நடத்த விரும்பும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும், மேல்நிலைப்பள்ளி முதல்வர்களும் இளைஞர்அமைதி மையம், முதல்குறுக்குத் தெரு, ஆனந்தரங்கர் நகர், புதுச்சேரி-8 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக ஜன.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.